Skip to content

யாருடைய கைவண்ணம்?

நாயின் மோப்ப சக்தி

நாயின் மோப்ப சக்தி

 நாய்கள், மோப்ப சக்தியைப் பயன்படுத்தி மற்ற நாய்களின் வயதையும், அவை ஆண் நாயா பெண் நாயா என்பதையும், அவை என்ன ‘மூடில்’ இருக்கின்றன என்பதையும் கண்டுபிடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வெடிகுண்டுகளையும் போதைப்பொருள்களையும் கண்டுபிடிப்பதற்குக்கூட நாய்களுக்குப் பயிற்சி கொடுக்க முடியும். தங்களைச் சுற்றி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள மனிதர்கள் கண்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாய்களோ மோப்ப சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒருவிதத்தில், மூக்கால் நாய்கள் “பார்க்கின்றன!”

 யோசித்துப்பாருங்கள்: மனிதர்களுக்கு இருக்கும் முகரும் திறனைவிட நாய்களுக்கு இருக்கும் முகரும் திறன் ஆயிரம் மடங்கு அதிகம். சில குறிப்பிட்ட சேர்மங்களுடைய நுண்ணிய பாகங்களைக்கூட நாய்களால் முகர முடிவதாக, யு. எஸ். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்டு டெக்னாலஜியின் அறிக்கை காட்டுகிறது. அதோடு, இந்த விசேஷ திறனைப் புரிந்துகொள்வதற்கு அந்த நிறுவனம் ஓர் உதாரணத்தைக் கொடுத்தது. ஒலிம்பிக் நீச்சல் குளத்தைப் போன்ற ஒரு பெரிய நீச்சல் குளத்தில் கால் டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்த பிறகு, அதில் கலந்த சர்க்கரையின் சுவையைக் கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு திறன் தேவைப்படும்! இதற்கு இணையான திறன் நாய்களுக்கு இருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.

 இந்தளவு அபார மோப்ப சக்தி நாய்களுக்கு இருப்பதற்கு என்ன காரணம்?

  •   நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதத்தோடு இருப்பதால், வாசனைத் துகள்களை அவற்றால் ஈர்த்துக்கொள்ள முடிகிறது.

  •   நாயின் மூக்கில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. ஒன்று, சுவாசிப்பதற்கு. இன்னொன்று, முகருவதற்கு. நாய்கள் மோப்பம் பிடிக்கும்போது, காற்று மூக்கு துவாரங்கள் வழியாக வாசனை ஏற்பிகள் (scent receptors) இருக்கும் பகுதிக்குப் போய் சேருகிறது.

  •   நாயின் தலையில் இருக்கும் ‘வாசனையை முகரும் பகுதியின்,’ அளவு 130 சதுர செ.மீ. ஆனால், மனிதனுக்கோ அது 5 சதுர செ.மீ. அளவுதான் இருக்கிறது.

  •   மனிதர்களுக்கு இருப்பதைவிட 50 மடங்கு அதிகமான வாசனை ஏற்பிகள் நாய்களுக்கு இருக்கின்றன.

 இந்த அம்சங்கள் இருப்பதால், பல வாசனைகள் கலந்த ஒரு பொருளில் இருக்கும் சேர்மங்களை நாய்களால் தனித்தனியாக முகர முடிகிறது. உதாரணத்துக்கு, நமக்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் ‘சூப்’ இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். அந்த சூப்பின் வாசனையை நம்மால் முகர முடியும். ஆனால், நாய்களால், அந்த சூப்பில் போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளின் வாசனையையும் முகர முடியும்.

 நாய்களுடைய மூளையும் மூக்கும் ஒன்றுசேர்ந்து செயல்படும்போது, “இந்த கிரகத்தில் இருக்கிற அதிநவீன வாசனை கண்டுபிடிக்கும் சாதனங்களில் ஒன்றாக அது ஆகிறது” என்று பைன் ஸ்ட்டிரீட் ஃபௌண்டேஷனை (புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வெடிகுண்டுகளையும், சட்டவிரோதமாகக் கடத்தப்படுகிற பொருள்களையும், புற்றுநோய் உட்பட சில நோய்களையும் கண்டுபிடிக்க எலக்ட்ரானிக் “மூக்குகளை” தயாரிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாய்களுக்கு மோப்ப சக்தி தானாகவே வந்திருக்குமா? அல்லது அது யாராவது ஒருவருடைய கைவண்ணமா?