Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல யோசனை! நல்ல பலன்!!

நல்ல யோசனை! நல்ல பலன்!!

அவள் பெயர் மரியா இஸபெல். பத்து வயது சிறுமி, ஒரு யெகோவாவின் சாட்சி. தென் அமெரிக்கா, சிலியிலுள்ள சான் பெர்னாடோ நகரில் வசிக்கிறாள். அவளும் அவளுடைய குடும்பத்தாரும் மப்புச்சி பழங்குடி இனத்தவர்கள். அவர்கள் பேசும் மப்புச்சி மொழியில் (மப்புடுங்குன் மொழி என்றும் அது அழைக்கப்படுகிறது) ஒரு புதிய சபையை ஆரம்பிக்க எடுக்கப்படுகிற முயற்சிகளை அவளுடைய குடும்பத்தார் எல்லோருமே ஆசையாக, ஆர்வமாக ஆதரித்துவருகிறார்கள்.

மப்புடுங்குன் மொழியில் கிறிஸ்துவின் நினைவுநாள் அனுசரிப்பு நடத்தப்படும் என்றும், அதற்காக 2,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றும் அறிவிப்பு செய்யப்பட்டபோது, அந்த அழைப்பிதழை எப்படியெல்லாம் விநியோகிப்பதென மரியா இஸபெல் யோசிக்க ஆரம்பித்தாள். அவள் என்ன செய்ய நினைத்தாள்? பள்ளியிலுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாட்சி கொடுப்பதில் வெற்றிகண்ட தன்வயது பிள்ளைகளின் அனுபவங்களை யோசித்துப் பார்த்தாள். அப்பா அம்மாவிடம் கலந்துபேசினாள். பள்ளியில் அழைப்பிதழ்களை அவள் விநியோகிக்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கான வழியைப் பற்றி யோசிக்கும்படி அவளுடைய அப்பாவும் அம்மாவும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். அவளுக்கு என்ன யோசனை உதித்தது?

முதலாவது, நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழை பள்ளியின் வாசற்கதவில் ஒட்டுவதற்கு பள்ளி அதிகாரிகளிடம் அனுமதி கேட்டாள். அவர்கள் அனுமதி அளித்ததோடு அவளுடைய முயற்சியைப் பாராட்டவும் செய்தார்கள். ஒருநாள் காலை அந்த அழைப்பிதழ் பற்றி பள்ளி முதல்வரே ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தார்!

அடுத்து, எல்லா வகுப்பறைகளுக்கும் செல்ல அனுமதி கேட்டாள். அனுமதி கிடைத்த பின்பு, ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மப்புச்சி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுவிட்டு அவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்தாள். “பள்ளியில் மொத்தமாக 10, 15 பேர் இருப்பார்களென நினைத்தேன். ஆனால், நிறையப் பேர் இருந்தார்கள். 150 அழைப்பிதழ்களைக் கொடுத்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!” என்று அவள் சொல்கிறாள்.

“அவர் எதிர்பார்த்தது ஒரு பெரியவரை!”

பள்ளி வாசற்கதவிலிருந்த நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழைப் பார்த்த ஒரு பெண்மணி அந்த நிகழ்ச்சி பற்றிய விவரத்தை யாரிடம் போய்க் கேட்பதென விசாரித்தார். பத்து வயது சிறுமியிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது ஆச்சரியத்தில் அவருடைய கண்கள் விரிந்தன! “அவர் எதிர்பார்த்தது ஒரு பெரியவரை!” என்று மரியா சொல்லும்போதே முகத்தில் ஒரு புன்னகை! அழைப்பிதழைப் பற்றிச் சுருக்கமாக விளக்கிவிட்டு அதை அவருக்கு கொடுத்தாள். பின்பு, அவளும் அவளுடைய பெற்றோரும் அந்தப் பெண்மணியைச் சந்தித்து நிறைய பைபிள் விஷயங்களைப் பேசுவதற்காக அவருடைய விலாசத்தைக் கேட்டாள். நினைவுநாள் அனுசரிப்பில் அந்தப் பெண்மணியோடுகூட 26 பேர் வந்தார்கள். மப்புடுங்குன் மொழிப் பிராந்தியத்தில் சேவை செய்கிற 20 பிரஸ்தாபிகளுக்கு ஒரே சந்தோஷம்! அந்தச் சிறிய தொகுதி இன்று ஒரு பெரிய சபையாக வளர்ந்துவருகிறது.

நீங்கள் சிறியவராக இருந்தால் சக மாணவர்களை... பெரியவராக இருந்தால் சக பணியாளர்களை... நினைவுநாள் அனுசரிப்புக்கோ பொதுப் பேச்சுக்கோ மாவட்ட மாநாட்டுக்கோ அழைக்க மரியாவைப் போலவே முயற்சி எடுக்கலாமே. எப்படியெல்லாம் அழைக்கலாம் என்பதற்கான யோசனைகளை அள்ளித்தரும் அனுபவங்களை நம்முடைய பிரசுரங்களில் படித்துப் பாருங்கள். முக்கியமாக, யெகோவாவைப் பற்றித் தைரியமாய்ப் பேச அவருடைய சக்தியைத் தரும்படி ஜெபம் செய்யுங்கள். (லூக். 11:13) இப்படிச் செய்தீர்களென்றால், உங்களுக்கும் அநேக ஆச்சரியங்கள் காத்திருக்கும்! நல்ல யோசனையால் கிடைக்கும் நல்ல பலன்களைப் பார்த்துப் பூரித்துப்போவீர்கள்!