Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?

கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?

“கடவுளை நாம புரிஞ்சிக்கவே முடியாது.” —அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த ஃபீலோ, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி.

‘[கடவுள்] நம் ஒருவருக்கும் தூரமானவர் இல்லை.’ —முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தர்சு பட்டணத்து சவுல்; ஏதன்ஸில் இருந்த தத்துவஞானிகளிடம் இதை சொன்னார்.

இந்த இரண்டு பேரில் யார் சொன்னதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்? நிறைய பேர் சவுல் சொன்னதை ஒத்துக்கொள்கிறார்கள். கடவுள் நம் பக்கத்திலயே இருக்கிறார், அவரை பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்று பைபிளும் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:26, 27) உதாரணத்துக்கு, கடவுளை பற்றி தெரிந்துகொள்ள முடியும், அதனால் நிறைய நன்மைகள் இருக்கிறது என்று இயேசுவும் சொன்னார்.—யோவான் 17:3.

ஆனால், ஃபீலோ போன்ற நிறைய பேர் கடவுளை நாம் புரிந்துகொள்ளவே முடியாது என்று சொல்கிறார்கள். இப்போது, எதை நம்புவது? ஆதாரங்களைப் பார்க்கலாம்.

கடவுளைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது என்று பைபிளும் சொல்கிறது. உதாரணமாக, கடவுள் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார், அவருக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பதையெல்லாம் நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால், இந்த விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது கடவுளுடைய நண்பராக இருக்க முடியும். (யாக்கோபு 4:8) இப்போது, கடவுளைப் பற்றி எதையெல்லாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்று பார்க்கலாம். அதைப் பற்றி யோசிப்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்றும் பார்க்கலாம்.

முழுமையாக புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள்

கடவுளுடைய வாழ்நாள்: கடவுள் “என்றென்றைக்கும்” வாழ்கிறவர் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 90:2) அதாவது, அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. கடவுள் ‘எத்தனை காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை [மனிதர்களால்] அறிய முடியாது.’—யோபு 36:26, ஈஸி டு ரீட் வர்ஷன்.

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டால் சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்கும். (யோவான் 17:3) ‘கடவுளுக்கு அழிவே இல்லை.’ அவரால் மட்டும்தான், நமக்கு மரணமே இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க முடியும்.—1 தீமோத்தேயு 1:17.

கடவுளுடைய ஞானம்: கடவுளுடைய ஞானத்திற்கு எல்லையே இல்லை! அவரைப் போல நம்மால் யோசிக்கவே முடியாது. அதனால்தான், “உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்கள் மிக உயர்ந்திருக்கின்றன” என்று அவரே சொல்கிறார். (ஏசாயா 40:28; 55:9, பொ. மொ.) “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்?” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 2:16, ஈஸி டு ரீட் வர்ஷன்.

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுளுக்கு நிறைய ஞானம் இருக்கிறது. ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஜெபம் செய்தாலும் அவரால் கேட்க முடியும். (சங்கீதம் 65:2) அவரால் ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை கவனிக்க முடியும். உதாரணத்திற்கு, சிட்டுக்குருவிகளைக்கூட கடவுள் கவனிக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. “அநேக சிட்டுக்குருவிகளைவிட [நாம்] மதிப்புமிக்கவர்கள்” என்றும் சொல்கிறது. (மத்தேயு 10:29, 31) அப்படியென்றால், நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கடவுள் கண்டிப்பாக கவனிப்பார், நாம் செய்யும் ஜெபங்களையும் கேட்பார்.

கடவுளுடைய செயல்கள்: “கடவுள் தொடக்கமுதல் இறுதிவரை செய்துவருவதை கண்டறிய மனிதரால்” முடியாது. (பிரசங்கி 3:11, [சபை உரையாளர்] பொ. மொ.) “தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.” (ரோமர் 11:33, ஈஸி டு ரீட் வர்ஷன்) கடவுள் செய்த எல்லா விஷயங்களையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், அவர் செய்யப்போகும் விஷயங்களைப் பற்றி அவருடைய நண்பர்களுக்குச் சொல்கிறார்.—ஆமோஸ் 3:7.

கடவுள் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார், அவருக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? பைபிளை எத்தனை தடவை படித்தாலும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்கலாம்; அதற்கு முடிவே இல்லை. கடவுளைப் பற்றியும் அவருடைய செயல்களைப் பற்றியும் எப்போதும் தெரிந்துகொள்ளலாம், எப்போதும் அவருடைய நண்பராக இருக்கலாம்.

சுலபமாக புரிந்துகொள்ள முடிந்த விஷயங்கள்

கடவுளைப் பற்றி நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதுதான். அதற்காக, அவரைப் பற்றி எதையுமே புரிந்துகொள்ள முடியாதா? இல்லை. அவரைப் பற்றி நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும் என்று பைபிள் சொல்கிறது. இப்போது சில விஷயங்களைப் பார்க்கலாம்...

கடவுளுடைய பெயர்: கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. “நான் யெகோவா” என்று அவரே சொன்னார். யெகோவா என்ற பெயர் பைபிளில் 7,000 தடவைக்கும் மேல் இருக்கிறது. வேறு எந்தப் பெயரும் இத்தனை முறை பைபிளில் இல்லை.—யாத்திராகமம் 6:2.

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுளுடைய பெயர் தெரிந்தால்தான், அதைச் சொல்லி ஜெபம் செய்ய முடியும். “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று இயேசு ஜெபம் செய்தார். (மத்தேயு 6:9) கடவுளுடைய பெயரை தெரிந்துகொண்டு, அவருக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் நாம் சாகவே மாட்டோம் என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 10:13.

கடவுள் வாழும் இடம்: மனிதர்கள் பூமியில் வாழ்கிறார்கள். அதேபோல், கடவுள் வாழ்வதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை நம்மால் பார்க்க முடியாது. (யோவான் 8:23; 1 கொரிந்தியர் 15:44) அதைத்தான் பரலோகம் என்று பைபிள் சொல்கிறது.—1 இராஜாக்கள் 8:43.

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் வாழ்வதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. கடவுள் வெறுமனே ஒரு சக்தி இல்லை. நம்மை போலவே அவரும் உயிருள்ளவர், உணர்ச்சியுள்ளவர். நம்மால்தான் அவரைப் பார்க்க முடியாது; ஆனால், அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். “எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை.”—எபிரெயர் 4:13.

கடவுளுடைய குணங்கள்: கடவுளுக்கு நிறைய நல்ல குணங்கள் இருக்கிறது. ‘கடவுள் அன்பானவர்.’ (1 யோவான் 4:8) பொய்யே சொல்ல மாட்டார். (தீத்து 1:2) சட்டென கோபப்பட மாட்டார்; எல்லாரிடமும் ஒரே மாதிரிதான் நடந்துகொள்வார்; இரக்கம் காட்டுவார். (யாத்திராகமம் 34:6; அப்போஸ்தலர் 10:34) அவர் எல்லாவற்றையும் படைத்தவர், ரொம்ப ரொம்ப உயர்ந்தவர்; இருந்தாலும், நம்மை மாதிரி சாதாரண மனிதர்களோடு நண்பராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.—சங்கீதம் 25:14.

இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுளுடைய குணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால் அவருடைய நண்பராக முடியும். (யாக்கோபு 2:23) பைபிளையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடவுளைத் தேடுங்கள்

கடவுளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்காதீர்கள். பைபிளைப் படித்தால் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். “அவரைத் தேடினால் கண்டடைவாய்” என்று பைபிள் சொல்கிறது. (1 நாளாகமம் 28:9, [1 குறிப்பேடு] பொ. மொ.) கடவுளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவரே ஆசைப்படுகிறார். பைபிளைப் படித்து, அதில் இருக்கும் விஷயங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். அப்போது கடவுள் “உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

பைபிளை எத்தனை முறை படித்தாலும் கடவுளைப் பற்றி புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்கலாம்

‘நம்மாலதான் கடவுளைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க முடியாதே, அப்புறம் எப்படி அவரோட நண்பரா ஆக முடியும்’னு யோசிக்கிறீர்களா? ஒரு டாக்டருடைய நண்பர் டாக்டராகத்தான் இருக்க வேண்டுமா? இல்லை. அந்த டாக்டரைப் பற்றி அவர் தெரிந்துகொண்டு, அவருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று புரிந்துகொண்டாலே போதும், அவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். அதேமாதிரி, பைபிளைப் படித்து கடவுள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொண்டு, அவருக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டாலே போதும், நாம் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்.

நீங்கள் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பைபிளைப் படியுங்கள். பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் வீட்டுக்கே வந்து பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுப்பார்கள். அதற்கு இந்த புத்தகத்தை கொடுத்தவரிடம் அதைப் பற்றி கேளுங்கள் அல்லது www.mt711.com வெப்சைட்டை பாருங்கள். ▪ (w15-E 10/01)