மத்தேயு எழுதியது 28:1-20

28  ஓய்வுநாளுக்குப் பின்பு, வாரத்தின் முதலாம் நாள், பொழுது விடியும் நேரத்தில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்+ கல்லறையைப் பார்க்கப் போனார்கள்.+  அங்கே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது; ஏனென்றால், யெகோவாவின் தூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, கல்லறையின் கல்லைப் புரட்டிப் போட்டு அதன்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தார்.+  அவருடைய தோற்றம் மின்னலைப் போல் மின்னியது; அவருடைய உடை பனியைப் போல் வெண்மையாக இருந்தது.+  அவரைப் பார்த்த காவல்காரர்கள் பயந்து நடுங்கி, செத்தவர்களைப் போல ஆனார்கள்.  தேவதூதர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்?+  அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+ அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.  சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்;+ அங்கே அவரைப் பார்ப்பீர்கள். இதைச் சொல்லத்தான் நான் வந்தேன்”+ என்றார்.  அவர்கள் சீக்கிரமாகக் கல்லறையைவிட்டு* வெளியே வந்து, பயத்தோடும் அதேசமயத்தில் மிகுந்த சந்தோஷத்தோடும், இந்த விஷயத்தை அவருடைய சீஷர்களுக்குச் சொல்வதற்காக ஓடினார்கள்.+  திடீரென்று இயேசுவே அவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினார். அவர்கள் அவர் முன்னால் போய் மண்டிபோட்டு, அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டார்கள். 10  இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள்! நீங்கள் என் சகோதரர்களிடம் போய், அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்று சொன்னார். 11  அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது, காவலர்களில்+ சிலர் நகரத்துக்குள் போய், நடந்த எல்லாவற்றையும் முதன்மை குருமார்களிடம் சொன்னார்கள். 12  இவர்கள் பெரியோர்களோடு கூடிவந்து ஆலோசனை செய்தார்கள்; அதன் பின்பு, படைவீரர்களுக்கு ஏராளமான வெள்ளிக் காசுகளைக் கொடுத்து, 13  “‘ராத்திரியில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்’+ என்று சொல்லுங்கள். 14  இது ஆளுநருடைய காதுக்கு எட்டினால், நாங்கள் அவரிடம் பேசிக்கொள்கிறோம், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்” என்றார்கள். 15  அதனால், அவர்கள் வெள்ளிக் காசுகளை வாங்கிக்கொண்டு, தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள்; இந்தப் பேச்சு யூதர்கள் மத்தியில் இந்த நாள்வரை பரவியிருக்கிறது. 16  இயேசு சொன்னபடியே+ 11 சீஷர்களும் கலிலேயாவில் இருக்கிற மலைக்குப் போனார்கள்.+ 17  அங்கே அவரைப் பார்த்தபோது அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள்; ஆனால், அவரைப் பின்பற்றியவர்களில் சிலர் சந்தேகப்பட்டார்கள். 18  அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+ 19  அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி,+ பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.+ 20  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.+ இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை+ எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

ஓய்வுநாளுக்கு: நே.மொ., “ஓய்வுநாட்களுக்கு.” இந்த வசனத்தில், ஓய்வுநாள் என்பதற்கான கிரேக்க வார்த்தை (சாபாட்டன்) பன்மை வடிவத்தில் இரண்டு தடவை வருகிறது. முதல் தடவை, அது வாரத்தின் ஏழாம் நாளை, அதாவது ஒரே நாளை, குறிக்கிறது; அதனால், ‘ஓய்வுநாள்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவை, அது ஏழு நாட்களை மொத்தமாகக் குறிக்கிறது; அதனால், ‘வாரம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த ஓய்வுநாள் (நிசான் 15) சூரிய அஸ்தமனத்தின்போது முடிவுக்கு வந்தது. “ஓய்வுநாளுக்குப் பின்பு,” இருட்டும் நேரத்தில் நடந்ததைப் பற்றி மத்தேயு எழுதியதாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், நிசான் 16-ன் ‘விடியற்காலையில்,’ ‘சூரியன் உதயமான நேரத்தில்’ அந்தப் பெண்கள் கல்லறையைப் பார்க்கப் போனார்கள் என்பதை மற்ற சுவிசேஷப் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.—மாற் 16:1, 2; லூ 24:1; யோவா 20:1; சொல் பட்டியலில் “ஓய்வுநாள்” என்ற தலைப்பையும், இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.

வாரத்தின் முதலாம் நாள்: அதாவது, “நிசான் 16.” ஓய்வுநாளுக்கு அடுத்த நாள்தான் யூதர்களுக்கு வாரத்தின் முதல் நாளாக இருந்தது.

யெகோவாவின் தூதர்: இந்த வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தில் நிறைய வசனங்களில் வருகின்றன; அதில் முதல் வசனம் ஆதி 16:7. செப்டுவஜன்ட்டின் ஆரம்பகாலப் பிரதிகளில் ஆஜிலாஸ் (தேவதூதர்; தூதர்) என்ற கிரேக்க வார்த்தைக்குப் பிறகு கடவுளுடைய பெயரைக் குறிக்கும் எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோலத்தான், இஸ்ரவேலில் உள்ள நஹால் ஹெவரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு செப்டுவஜன்ட் பிரதியில் (அதாவது, சக 3:5, 6 வசனங்களில்) கொடுக்கப்பட்டுள்ளது; இந்தப் பிரதி கி.மு. 50-க்கும் கி.பி. 50-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. (இணைப்பு C-ஐப் பாருங்கள்.) நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் கடவுளுடைய பெயரை நீக்காமல், “யெகோவாவின் தூதர்” என்றே மொழிபெயர்த்திருக்கின்றன.​—இணைப்பு A5-யும் இணைப்பு C-யும் பாருங்கள்.

யெகோவாவின் தூதர்: மத் 1:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.

சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்: இயேசு உயிரோடு எழுப்பப்பட்டிருந்த செய்தி இந்தப் பெண்களிடம்தான் முதலில் சொல்லப்பட்டது; மற்ற சீஷர்களிடம் அதைத் தெரிவிக்கும்படியும் இவர்களிடம்தான் சொல்லப்பட்டது. (மத் 28:2, 5, 7) பைபிளுக்கு முரணான யூதப் பாரம்பரியத்தின்படி, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, யெகோவாவின் தூதர் இந்தச் சந்தோஷமான வேலையைக் கொடுத்து இந்தப் பெண்களைக் கௌரவப்படுத்தினார்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நபர்கள்கூட தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) இங்கே சொல்லப்படும் தொழுநோயாளி, மக்களைக் குணப்படுத்தும் சக்திபெற்றிருந்தவரிடம், அதாவது கடவுளுடைய பிரதிநிதியிடம், பேசிக்கொண்டிருந்ததைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. எதிர்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் முன்னால் தலைவணங்குவது பொருத்தமானதாக இருந்தது.—மத் 9:18; இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இயேசு கடவுளுடைய பிரதிநிதி என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை ஒரு தெய்வமாக நினைத்து வணங்காமல், ‘கடவுளுடைய மகனாக’ நினைத்துத் தலைவணங்கினார்கள்.​—மத் 2:2; 8:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.​—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

மண்டிபோட்டு: வே.வா., “தலைவணங்கி; தரைவரைக்கும் குனிந்து; மரியாதை செலுத்தி.”​—மத் 8:2; 14:33; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

என் சகோதரர்களிடம்: இயேசு தன் சீஷர்களை ‘சகோதரர்கள்’ என்று அழைத்தார்; ஏனென்றால், ஆன்மீக விதத்தில் அவர்கள் இயேசுவின் குடும்பத்தாராக இருந்தார்கள்.—மத் 28:16-ஐப் பாருங்கள்; இவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்: மத் 25:40; யோவா 20:17; எபி 2:10-12.

பெரியோர்களோடு: மத் 16:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பெரியோர்களாலும்: வே.வா., “மூப்பர்களாலும்.” பெரியோர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டிரோஸ். பைபிளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயத்திலோ தேசத்திலோ அதிகாரமும் பொறுப்பும் உள்ள நபர்களை அது முக்கியமாகக் குறிக்கிறது. அது சிலசமயங்களில் வயதில் மூத்தவர்களைக் குறிக்கிறது (லூ 15:25; அப் 2:17), ஆனால் எப்போதுமே அல்ல. இந்த வசனத்தில் அது யூதத் தலைவர்களைக் குறிக்கிறது; அவர்கள் அடிக்கடி முதன்மை குருமார்களோடும் வேத அறிஞர்களோடும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் நியாயசங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.​—மத் 21:23; 26:3, 47, 57; 27:1, 41; 28:12; சொல் பட்டியலில் “மூப்பர்கள்; பெரியோர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

இது: அதாவது, “அவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்போகும் பொய்.” ரோமப் படைவீரர்கள் காவல் காக்கும்போது தூங்கிவிட்டால் மரண தண்டனை பெறலாம்.

ஆளுநருடைய: அதாவது, “பொந்தியு பிலாத்துவுடைய.”

போனார்கள்: அநேகமாக, கலிலேயாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்.—1கொ 15:6.

சிலர் சந்தேகப்பட்டார்கள்: 1கொ 15:6-ன்படி பார்த்தால், சந்தேகப்பட்டவர்களில் அப்போஸ்தலர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. கலிலேயாவில் எந்த சீஷர்கள்முன் இயேசு இன்னும் தோன்றாமல் இருந்தாரோ அவர்கள்தான் சந்தேகப்பட்டதாகத் தெரிகிறது.

எல்லா தேசத்தாரையும்: ‘எல்லா தேசத்தாரிடமும்’ போக வேண்டுமென்ற கட்டளை புதிதாக இருந்தது. இயேசு ஊழியம் செய்த காலத்திற்கு முன்பு, மற்ற தேசத்தார் இஸ்ரவேலுக்கு வந்து இஸ்ரவேலர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க முடிந்தது. (1ரா 8:41-43) ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மற்ற தேசத்தாரிடம் போய்ப் பிரசங்கிக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். இப்படி, சீஷராக்கும் வேலையைக் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.—மத் 10:1, 5-7; வெளி 7:9; மத் 24:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சீஷர்களாக்கி: இதற்கான கிரேக்க வினைச்சொல் மாத்தெட்யூயோ. “கற்றுக்கொடுத்து” என்று இதை மொழிபெயர்க்கலாம்; சீஷர்களாக்கும் குறிக்கோளோடு கற்றுக்கொடுப்பதை இது அர்த்தப்படுத்தலாம். “ஞானஸ்நானம் கொடுங்கள்,” “கற்றுக்கொடுங்கள்” என்ற வினைச்சொற்கள், ‘சீஷர்களாக்க’ வேண்டுமென்ற கட்டளையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

பரலோகத் தகப்பனின் . . . அவருடைய மகனின் . . . அவருடைய சக்தியின்: யெகோவாதான் நம் பரலோகத் தகப்பன் என்று ஏற்றுக்கொள்வது இயல்பானது; ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர், நமக்கு உயிர் கொடுத்தவர். (சங் 36:7, 9; வெளி 4:11) அதேசமயத்தில், கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய மகன் வகிக்கிற பங்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீட்புப் பெற முடியாது என்றும் பைபிள் சொல்கிறது. (யோவா 14:6; அப் 4:12) அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தி வகிக்கிற பங்கை ஏற்றுக்கொள்வதும் அவசியம். ஏனென்றால், கடவுள் அதைப் பல விதங்களில் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, உயிர் கொடுப்பதற்காகவும் (யோபு 33:4), தன் செய்திகளைச் சொல்ல மனிதர்களைத் தூண்டுவதற்காகவும் (2பே 1:21), தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு வல்லமை தருவதற்காகவும் (ரோ 15:19) அதைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் திருத்துவத்தை ஆதரிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், தகப்பனும் மகனும் கடவுளுடைய சக்தியும் அதிகாரத்திலோ ஸ்தானத்திலோ என்றென்றும் நிலைத்திருப்பதிலோ சமம் என்று பைபிள் எங்குமே சொல்வதில்லை. ஒரே வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற காரணத்துக்காக, தகப்பனும் மகனும் கடவுளுடைய சக்தியும் சமம் என்றோ, என்றென்றும் நிலைத்திருக்கிற மூன்று கடவுள்கள் என்றோ சொல்லவே முடியாது.—மாற் 13:32; கொலோ 1:15; 1தீ 5:21.

அவருடைய சக்தியின்: வே.வா., “செயல் நடப்பிக்கும் அவருடைய பரிசுத்தமான ஆற்றலின்.” “சக்தி” என்ற வார்த்தை (கிரேக்கில், அஃறிணையில் இருக்கிறது) ஒரு நபரைக் குறிப்பதில்லை. அது கடவுளிடமிருந்து வருகிற ஆற்றலை, அதாவது செயல்படுகிற ஆற்றலை, குறிக்கிறது.​—சொல் பட்டியலில் “கடவுளுடைய சக்தி”; “ரூவக்; நியூமா” என்ற தலைப்புகளைப் பாருங்கள்.

பெயரிலும்: ‘பெயர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை (ஓனோமா) ஒருவருடைய தனிப்பட்ட பெயரை மட்டும் குறிப்பதில்லை. இந்த வசனத்தில், பரலோகத் தகப்பன் மற்றும் மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும், கடவுளுடைய சக்தியின் பங்கையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்போது கடவுளோடு புதிய பந்தம் உருவாகிறது.​—மத் 10:41-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால்: நே.மொ., “தீர்க்கதிரிசி என்ற பெயரில்.” இந்த வசனத்தில் “பெயரில்” என்ற கிரேக்க மரபுத்தொடர், ஒரு தீர்க்கதரிசி வகிக்கிற பொறுப்பையும் செய்கிற வேலையையும் மதிப்பதைக் காட்டுகிறது.​—மத் 28:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும்: இந்த வார்த்தைகள், பிரசங்க வேலை எந்தளவுக்கு விரிவாகச் செய்யப்படும் என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றன. “உலகம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை (ஓய்கூமீனே), மனிதர்கள் குடியிருக்கிற இடமாகிய இந்தப் பூமியைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. (லூ 4:5; அப் 17:31; ரோ 10:18; வெளி 12:9; 16:14) முதல் நூற்றாண்டில், யூதர்கள் சிதறிப்போயிருந்த மாபெரும் ரோம சாம்ராஜ்யத்தைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (அப் 24:5) தேசத்தார் என்பதற்கான கிரேக்க வார்த்தை ஈத்னோஸ். இது, பெரும்பாலும் இரத்த சொந்தங்களாகவும் ஒரே மொழி பேசுபவர்களாகவும் இருக்கிற தொகுதியினரைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தார் அல்லது இனத்தார் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிறார்கள்.

பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.

கடைசிக் கட்டத்துக்கும்: “கடைசிக் கட்டம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, சின்டீலீயா.‏ இதன் அர்த்தம், “ஒன்றுசேர்ந்து முடிவடைவது; ஒட்டுமொத்தமாக முடிவடைவது.” (மத் 13:39, 40, 49; 28:20; எபி 9:26) பல சம்பவங்கள் ஒன்றாக நடந்து, கடைசியில் ஒட்டுமொத்தமாக ஒரு ‘முடிவுக்கு’ வரும் காலப்பகுதியை இது குறிக்கிறது; இந்த ‘முடிவை’ பற்றித்தான் மத் 24:6, 14-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே, டீலாஸ் என்ற வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.​—மத் 24:6, 14-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

கற்பித்தார் . . . பிரசங்கித்தார்: பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், கற்பிப்பவர் செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல் அறிவுரை சொல்கிறார், விளக்குகிறார், பக்குவமாக எடுத்துச் சொல்கிறார், அத்தாட்சி அளிக்கிறார்.—மத் 3:2; 28:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

இதோ!: இதற்கான கிரேக்க வார்த்தை இடோ. அடுத்து சொல்லப்படும் விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; காட்சியைக் கற்பனை செய்துபார்க்கும்படியோ ஒரு விவரத்தைக் கவனிக்கும்படியோ தூண்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கோ, புதிய அல்லது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கோகூட அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எபிரெய வேதாகமத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்: ‘கற்றுக்கொடுப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை அறிவுரை சொல்வது, விளக்குவது, பக்குவமாக எடுத்துக் காட்டுவது, அத்தாட்சி அளிப்பது போன்றவற்றைக் குறிக்கிறது. (மத் 3:1; 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலை. அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதும் அதில் அடங்கும்.—யோவா 13:17; எபே 4:21; 1பே 2:21.

இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இந்தச் சகாப்தத்தின்: சொல் பட்டியலில் “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்பைப் பாருங்கள்.

கடைசிக் கட்டம்வரை: மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

மீடியா

கல்லறை
கல்லறை

யூதர்கள் பொதுவாக இறந்தவர்களைக் குகைகளிலோ, பாறைகளில் வெட்டப்பட்ட அறைகளிலோ அடக்கம் செய்தார்கள். ராஜாக்களின் கல்லறைகளைத் தவிர மற்றவை நகரங்களுக்கு வெளியில் இருந்தன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யூதர்களின் கல்லறைகளை வைத்துப் பார்க்கும்போது, அவை மிக எளிமையாக இருந்தன என்று தெரிகிறது. யூதர்கள் இறந்தவர்களை வழிபடாததாலும், மரணத்துக்குப் பிறகு ஒருவர் எங்கோ வாழ்கிறார் என்று நம்பாததாலும் அவர்களுடைய கல்லறைகள் அப்படி எளிமையாக இருந்திருக்கலாம்.