Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கை தரும் போதனைகள்

நம்பிக்கை தரும் போதனைகள்

சீக்கிரத்தில், நல்ல நல்ல மாற்றங்களைச் செய்யப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். மனிதர்களுடைய கஷ்டங்களுக்கு முடிவுகட்டி அவர்களை இந்தப் பூமியில் அவர் சந்தோஷமாக வாழ வைக்கப்போகிறார். (சங்கீதம் 37:11) இந்த வாக்குறுதிகளை நாம் நம்பலாமா? கண்டிப்பாக நம்பலாம். ஏனென்றால், ‘பொய் சொல்ல கடவுள் சாதாரண மனுஷன் கிடையாது.’ (எண்ணாகமம் 23:19) கடவுள் செய்யப்போகிற சில நல்ல விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

கெட்டவர்களைக் கடவுள் அழிப்பார்

“பொல்லாதவர்கள் களைகளை போல முளைக்கும்போதும், அக்கிரமக்காரர்கள் எல்லாரும் செழிக்கும்போதும், அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.”​—சங்கீதம் 92:7.

முந்தின கட்டுரையில் பார்த்தது போல, மோசமான காரியங்கள் அதிகமாகிக்கொண்டேதான் போகின்றன. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், பைபிளில் 2 தீமோத்தேயு 3:1-5 வசனங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளபடி “கடைசி நாட்களில்” மக்கள் படு மோசமானவர்களாக இருப்பார்கள். இந்தக் கடைசி நாட்கள் எதைக் குறிக்கிறது? கடவுள்பயம் இல்லாத மக்கள் வாழ்கிற இந்த உலகத்தின் கடைசி நாட்களைத்தான் அது குறிக்கிறது. கெட்ட வழிகளை விட்டுத் திருந்தாத மக்களைக் கடவுள் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். அப்போது, நல்ல மக்கள் மட்டும்தான், அதாவது கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் மட்டும்தான், இந்தப் பூமியில் இருப்பார்கள். “நீதிமான்கள் [நல்ல மக்கள்] இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 37:29.

சாத்தானைக் கடவுள் அழிப்பார்

“சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை . . . நசுக்கிப்போடுவார்.”​—ரோமர் 16:20.

சாத்தானையும் பேய்களையும் கெட்ட மக்களையும் கடவுள் அழித்த பிறகு, இந்தப் பூமி ஒரு சமாதானப் பூங்காவாக ஆகிவிடும். அப்போது, “[உங்களை] பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்” என்று கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—மீகா 4:4.

நோய்களுக்கும் மரணத்துக்கும் கடவுள் முடிவுகட்டுவார்

“அவர்களுடைய [மக்களுடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​—வெளிப்படுத்துதல் 21:4.

சாத்தானாலும், ஆதாம்-ஏவாளினாலும், நமக்கு இருக்கிற தவறு செய்யும் இயல்பினாலும் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளைக் கடவுள் சரிசெய்வார். அதனால், கஷ்டங்களும் நோய்நொடிகளும் முடிவுக்கு வந்துவிடும். ‘மரணம்கூட இருக்காது.’ படைப்பாளரை நேசிக்கிற... அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிற... மக்கள் என்றென்றும் வாழ்வார்கள். அவர்கள் எங்கே வாழ்வார்கள்?

கடவுள் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்

“வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”​—ஏசாயா 35:1.

கெட்டவர்களைக் கடவுள் அழித்த பிறகு இந்தப் பூமி பசுமையாக ஆகிவிடும். அப்போது பூமி முழுக்க அழகான பூங்காக்களும், தோட்டங்களும் இருக்கும். (சங்கீதம் 72:16) பூமியில் ஏராளமான விளைச்சல் இருக்கும். கடல், ஆறு, ஏரி, குளம் என எல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கும். அவற்றில் ஏராளமான உயிரினங்கள் வாழும். மக்கள் தங்களுடைய வீட்டைத் தாங்களே கட்டி அதில் குடியிருப்பார்கள். அங்கே யாருமே வீடு இல்லாமலோ, சாப்பாட்டுக்கு வழியில்லாமலோ வறுமையிலோ கஷ்டப்பட மாட்டார்கள்.—ஏசாயா 65:21, 22.

இறந்தவர்களைக் கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்

“[இறந்தவர்கள்] உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”​—அப்போஸ்தலர் 24:15.

இறந்துபோன உங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அவர்களை சர்வசக்தியுள்ள கடவுள் பூஞ்சோலை பூமியில் உயிரோடு கொண்டுவருவார். உங்களால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அவர்களாலும் உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அந்தச் சமயத்தில், நீங்கள் சந்தோஷத்தில் எப்படிப் பூரித்துப்போவீர்கள் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். இது கண்டிப்பாக நடக்குமென்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்? இறந்துபோன பெரியவர்களையும் சிறியவர்களையும் உயிரோடு எழுப்பி, அவர்களுடைய குடும்பத்தோடு அவர்களை ஒன்றுசேர்த்த பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இயேசு பெரும்பாலும், மற்றவர்களுக்கு முன்னால்தான் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்.—லூக்கா 8:49-56; யோவான் 11:11-14, 38-44.