Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

 நேரத்தை ஏன் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்?

  •   நேரமும் பணம் மாதிரிதான். அதை வீணாக்கிவிட்டால், தேவைப்படும்போது உங்களிடம் இருக்காது. ஆனால், நேரத்தை நன்றாகத் திட்டமிட்டு பயன்படுத்தினால், உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு கொஞ்சம் நேரம் மிச்சமிருக்கும்!

     பைபிள் நியமம்: “சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை. ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.”​—நீதிமொழிகள் 13:4.

     உண்மை: நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும்போது உங்களுக்கு கொஞ்சம் அல்ல, நிறைய சுதந்திரம் கிடைக்கும்.

  •    நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும் கலையை நீங்கள் இப்போதே கற்றுக்கொண்டால், பெரியவர்களாக ஆன பிறகும் அது உங்களுக்குக் கைகொடுக்கும். உங்களுடைய வேலை தொடர்ந்து இருப்பதும் பறிபோவதும், நேரத்தை நீங்கள் எந்தளவு திட்டமிட்டு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், வேலைக்கு எப்போதுமே தாமதமாக வருபவரை நீங்கள் வேலையில் வைப்பீர்களா?

     பைபிள் நியமம்: “சின்ன விஷயத்தில் உண்மையுள்ளவனாக இருக்கிறவன் பெரிய விஷயத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்.”​—லூக்கா 16:10.

     உண்மை: நேரத்தை நீங்கள் எப்படித் திட்டமிட்டு பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லிவிடலாம்.

 நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்துவது சுலபமல்ல என்பது உண்மைதான். அதற்குத் தடையாக இருக்கும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

 தடை #1: நண்பர்கள்

 “எங்கயாவது வெளிய போகலாம்னு நண்பர்கள் கூப்பிட்டாங்கனா, எனக்கு நேரமே இல்லேனாலும் அவங்ககூட போயிடுவேன். மற்ற வேலைகளையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வேகவேகமா செஞ்சு முடிச்சிடலாம்னு நினைப்பேன். ஆனா நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்காது. எல்லாமே தப்பு தப்பாதான் நடக்கும்.”​—சிந்தியா.

 தடை #2: கவனச்சிதறல்கள்

 “வேக்யூம் கிளீனர் மாதிரிதான் டிவியும்! அதுல வர்ற நிகழ்ச்சிகளும் படங்களும் உங்கள அப்படியே இழுத்து வச்சுக்கும், அந்த இடத்தவிட்டு நகரவே விடாது.”​—ஐவி.

 “மணிக்கணக்கா என்னோட டேப்லட்டுல எதையாவது பண்ணிட்டு இருப்பேன். சார்ஜ் எல்லாம் போய் அதுவே ஆஃப் ஆனதுக்கு அப்புறம்தான் நேரம் எல்லாம் வீணா போச்சேனு மனசு அடிச்சுக்கும்.”​—மேரி.

 தடை #3: நேரத்தைத் தள்ளிப்போடுவது

 “வீட்டுப்பாடங்களயும் மற்ற வேலைகளயும் அப்புறமா பார்த்துக்கலாம்னு தள்ளிபோட்டுட்டு, ஒண்ணுக்கும் உதவாத விஷயத்த செஞ்சிட்டு இருப்பேன். வேலைகள முடிச்சே ஆகணுங்கற கட்டாயம் வர்றப்போ, அவசர அவசரமா செய்வேன். இப்படி செய்றது சரியே இல்ல.”​—பெத்.

நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும்போது உங்களுக்கு கொஞ்சம் அல்ல, நிறைய சுதந்திரம் கிடைக்கும்

 நீங்கள் என்ன செய்யலாம்

  1.   முக்கியமான வேலைகளைப் பட்டியல் போடுங்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகள் மற்றும் வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை பட்டியல் போடுங்கள். இந்த வேலைகளைச் செய்து முடிக்க ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று எழுதி வையுங்கள்.

     பைபிள் நியமம்: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”​—பிலிப்பியர் 1:​10.

  2.   சும்மா இருக்கும் நேரத்தில் நீங்கள் செய்ய விரும்புவதை பட்டியல் போடுங்கள். உதாரணத்துக்கு, டிவி பார்ப்பது, சோஷியல் நெட்வர்க்கைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள்.

     பைபிள் நியமம்: “ஞானமாக நடந்துகொள்ளுங்கள்; உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”​—கொலோசெயர் 4:5.

  3.   திட்டம் போடுங்கள். நீங்கள் எழுதி வைத்திருக்கும் இரண்டு பட்டியல்களையும் இப்போது பாருங்கள். முக்கியமான காரியங்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்களா? சும்மா பொழுதை போக்குகிற நேரத்திலிருந்து முக்கியமான வேலைகளுக்கு நேரத்தை வாங்க வேண்டியிருக்கிறதா?

     டிப்ஸ்: தினமும் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு பட்டியல் போடுங்கள். ஒவ்வொரு வேலையைச் செய்து முடித்த பிறகும் அந்தப் பட்டியலில் குறித்து வையுங்கள்.

     பைபிள் நியமம்: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.”​—நீதிமொழிகள் 21:5.

  4.   போட்ட திட்டத்தைப் பின்பற்றுங்கள். முக்கியமான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய சமயங்களில், ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடலாம் என்று நண்பர்கள் சொன்னால், சில சமயங்களில் ‘முடியாது’ என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படிச் செய்யும்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும், அதைச் சந்தோஷமாகவும் அனுபவிக்க முடியும்.

     பைபிள் நியமம்: “சுறுசுறுப்பாக இருங்கள், உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்.”​—ரோமர் 12:11, அடிக்குறிப்பு.

  5.   முதலில் கடினமாக உழையுங்கள், பிறகு ஜாலியாக இருங்கள். “சிலசமயத்துல, என்னோட பட்டியல்ல இருக்குற ரெண்டு வேலைய செஞ்சு முடிச்ச உடனே, 15 நிமிஷம் டிவி பார்த்துட்டு அதுக்கு அப்புறம் மற்ற வேலைய செய்யலாம்னு நினைப்பேன். 15 நிமிஷம் 30 நிமிஷமாகும், 30 நிமிஷம் 1 மணிநேரமாகும். நேரம் போறதே தெரியாது. கடைசியா 2 மணிநேரத்த வீணாக்கியிருப்பேன்!” என்று தாரா என்ற இளம் பெண் சொல்கிறாள்.

     இதற்கு என்ன தீர்வு? பொழுதுபோக்கு என்பது, உங்கள் வேலைகளை எல்லாம் செய்து முடித்ததற்குப் பிறகு அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம். தினசரி வாழ்க்கையில் கட்டாயம் செய்தே ஆக வேண்டிய விஷயம் அல்ல.

     பைபிள் நியமம்: “கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.”​—பிரசங்கி 2:​24.